கிண்ணியா மேய்ச்சல் தரை வழக்கு : நீதிமன்றத் தீர்ப்பில் வெற்றி!

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 10 – 10 – 2023 ஆம் திகதி தங்களது கால்நடைகளுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சல் தரை கோரி HCT/writ/593/23 எனும் இலக்கத்தின் கீழ் ஆணை வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்கள்.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2025-05 – 28ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.

இத் தீர்ப்பின்படி கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினால் தங்களது மனுப் பத்திரத்தில் கோரப்பட்டிருந்தபடி அவர்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அண்ணளவாக 7200 ஏக்கர் மேய்ச்சல் தரை வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் கிண்ணியா பிரதேச செயலாளர் திருகோணமலை மாவட்ட செயலாளர் உட்பட மொத்தமாக 11 எதிர் மனுதாரர்கள் குறிப்பிடப்பட்டிருந்தார்கள்.

இந்த வழக்கின் சார்பில் மேய்ச்சல் தரை தொடர்பில் ஆதரவாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.சீ.சபறுள்ளா, ஏ.எஸ்.சாஹிர் , சாந்த ஜயவர்தன ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு தாக்கல் செய்யப்படும் முன்னர் கடந்து 2008 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மேய்ச்சல் தரைக்காக திருக்கோ லாமலை மாவட்ட நில அளவையாளர் திணைக்களத்தினால் அளக்கப்பட்டு நில அளவைப் படமும் தயாரிக்கப்பட்டிருந்தது.

அதே நேரம் அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாக வைத்தே கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர் சங்கம் வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள்.

கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆணை வழக்கில் writ of Mandamus, writ of prohibition ஆகிய இருவகையான ஆணை நிவாரணங்களும் கோப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்த எதிர் மனுதாரர்களினால் மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு பத்திரத்துக்கு எந்தவித ஆட்சேபணையையும் தாக்கல் செய்திருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை கோரி தசாப்த காலங்களாக கிண்ணியா பிரதேச கால்நடை வளர்ப்பார்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

காலகாலமாக இந்த மண்ணில் தலைவர்களாக வருகின்ற அரசியல் செய்கையாளர்கள் இதோ செய்து தருகின்றோம் அதோ செய்து தருகின்றோம் என்று போட்ட குறளி வித்தையில் ஏமாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டு முடியாத நிலையில் இறுதியாகவே நீதிமன்றத்தில் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆணை வழக்கினை தாக்கல் செய்திருந்தார்கள்.

மேலும் கொழும்பு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பின் இறுதி பகுதியில் “கௌரவ நீதிமன்றத்தினால் (மனுதாரர் சார்பில்) வழங்கப்படுகின்ற இந்த கட்டளையினை வழக்கின் எதிர் மனுதாரர்கள் அமுலாக்கம் செய்ய வேண்டும். மற்றும் இந்த தீர்ப்புக்கு இணங்கி ஒழுகி நடக்காமை அல்லது அந்த கட்டளையை அமுல்படுத்தாமல் இருத்தல் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு சமனாகும் என்றும் தீர்ப்பின் பிரகாரம் குறிப்பிட்டுள்ளது.