காதல் என்ற போர்வையில் 18 இலட்சம் ரூபா பெற்று விட்டு உறவை முறித்த காதலி கைது

கிளிநொச்சி பகுதியில் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் தனது காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் மானிப்பாயில் வசிக்கும் இளைஞர் வருகை தரும் சந்தர்ப்பங்களில் தனது உறவினர் ஒருவர் அவுஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்து உரையாட செய்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு உரையாடியதன் பின்னர் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அழைப்பித்துக்கொள்ள முடியும் என தொலைபேசியில் உரையாடியவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 18 இலட்சம் ரூபாய் பணத்தை யுவதியிடம் காதலன் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து யுவதியின் நடத்தையில் மாற்றங்கள் ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் காதல் தொடர்பும் துண்டித்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே காதலன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள யுவதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்