களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் பொதுச்சந்தையை சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு அபாயம் பரவக்கூடிய பல்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விசேட செயற்திட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாதார பரிசோதகர் குழாம், மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிசார் இணைந்து முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது களுவாஞ்சிக்குடி மீன் சந்தையில் சுகாதார சீர் கேடுகள் நிறைந்ததாக காணப்பட்ட மீன் வியாபாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.