
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம்
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இளையதம்பி சிறிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் கல்வி சார்ந்த பல விடயங்களை முன்வைத்ததுடன் முக்கியமாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு நீண்ட நாள் பிரச்சனையாகவுள்ள நிரந்தரமாக ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எதிர்வரும் 9ஆம் திகதி நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இடம்பெறும் தமிழ்மொழி மூல பரீட்சைகளில் சிங்கள மொழியானது மொழிபெயர்ப்புச் செய்யப்படாமல் நேரடியாக சிங்கள மொழியில் அச்சிடப்படுவதன் விளைவாக தமிழ்மொழி பரீட்சாத்திகள் பல அஷௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் என்ற ரீதியில் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவிய போது, கருத்து தெரிவித்த ஆணையாளர் பரீட்சாத்திகளுக்கு மேலதிகமாக புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குறித்த கருத்து தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலதிகப் புள்ளிகள் வழங்கப்படுவது என்பது நிரந்தரத் தீர்வாக அமையாது எனவும் இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதற்கான முழுமையான காரணம் என்ன என்பதையும் வினவிய போது, குறித்த பிரச்சினைக்கு காரணம் எம்மிடம் மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் பற்றாகுறையே என ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரிடம் மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை பூர்த்தி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த போது குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய, கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் (டாக்டர்) மதுர செனவிரத்ன மற்றும் கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News