ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதியர் இன்று வெள்ளிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஹரேந்திர கலுகம்பிட்டிய தெரிவித்தார்.
ஈஸி கேஷ் அமைப்பு மூலம் பணம் பெற்றுக்கொண்டு, இளம் தம்பதியினர் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வருவதாக நாவலப்பிட்டி பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நாவலப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, நாவலப்பிட்டியில் உள்ள டோலோஸ்பாகா வீதியில் உள்ள பழைய ரயில்வே அதிகாரி இல்லத்திற்கு அருகில் பக்கற்றுகளில் பொதி செய்யப்பட்ட ஐஸ் போதைப்பொருளை சேமித்து வைத்திருந்த போது சந்தேக நபர்களைக் கைது செய்து மேற்கொண்ட சோதனையில் சந்தேக நபரின் உள்ளாடைகளில் 52 பக்கற்றுகளில் பொதி செய்யப்பட்ட 35 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பொதி செய்த ஒரு பக்கற்றின் விலை 7,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்களான தம்பதியினர் 23, 27 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கம்பளையின் கிராபன பகுதியில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த தம்பதியினர் துபாய் தாரு என்ற போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி பகுதி முழுவதும் விநியோகித்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .


