இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது
10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை காலை 9.55 மணியளவில் சந்தேகநபரான அதிகாரியை கைது செய்திருந்தனர்.
முறைப்பாட்டாளரினால் தேக்கு மரம் ஒன்றை வெட்டுவதற்கான இரு அனுமதிப் பத்திரங்களை தயாரிப்பதற்கு தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்காக, ஒரு அனுமதிப்பத்திரத்துக்கு 5 ஆயிரம் ரூபா பணத்தை கப்பமாக கோரியுள்ளார். பின்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான அதிகாரியை தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கைதான சந்தேகநபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
