
இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்
-மன்னார் நிருபர்-
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஏலக்காய் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 3 சந்தேக நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் வளைகுடா கடல் வழியாக நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி துறைமுக பகுதியில் மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரை கண்டதும் 3 நபர்கள் மூட்டை ஒன்றை விட்டு தப்பித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த மரைன் பொலிஸார் அந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து ஏலக்காய் மூட்டை யை கைப்பற்றிய பொலிஸார் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட ஏலக்காய் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குந்துகால் கடற்கரை இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தும் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


