இலங்கை ‘A’ அணி அரை இறுதிக்குத் தகுதி
ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்’ T20 கிரிக்கெட் தொடரில் நேற்று (19) நடைபெற்ற முக்கியமான போட்டியில் பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
முதலில் துடுப்பாடிய இலங்கை ‘A’ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் ‘A’ அணியால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது .
இலங்கை அணி வெற்றி பெற, சகலதுறை ஆட்டக்காரரான அணித் தலைவர் துனித் வெல்லாலகே சிறப்பான பங்களிப்பை வழங்கினார். துடுப்பாட்டத்தில் 14 பந்துகளில் 23 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் பந்துவீச்சில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
ஆசிய கிரிக்கெட் சபையின் மேற்பார்வையில் கட்டாரின் டோவில் நடைபெறும் இத்தொடரில், இந்த வெற்றியின் மூலம் இலங்கை ‘A’ அணி ‘A’ பிரிவின் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கை ‘A’ அணி அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் 21ஆம் திகதி பாகிஸ்தானுடன் மோதுகிறது .
