
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் நடைபெறும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் காணப்படும் உப்போடை லேக் வீதி 141.89 மில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்விற்கு விசேட அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கலந்து சிறப்பித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களான முத்துலிங்கம் துதீஸ்வரன், திருமதி. செல்லப்பெருமாள் வணிதா, மொகமட் லத்தீப், செல்வி.தயாளகுமார் கௌரி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் செல்வராசா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு, வீதி அபிவிருத்திப் பணிகளின் ஆரம்ப நிகழ்வினை பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து ஆரம்பித்து வைத்ததுடன், செப்பனிடப்படவுள்ள வீதியினையும் பார்வையிட்டனர்
