அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தான் காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது

-யாழ் நிருபர்-

 

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர அரசியல் பிரதிநிதிகளின் அறிக்கைக்காக இடைநிறுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வேலணை பிரதேச செயலகத்தக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம பிரிவில் கடற்படையினர் முகாம் அமைந்துள்ள தனியார் காணி அளவீட்டுப்பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு பொதுமக்களும் அரசியல் பிரதிநிதிகளும் அதை எதிர்த்து இடைநிறுத்துவதற்கு போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சில அரசியல் பிரதிநிதிகள் உடகங்களுக்கு அறிக்கை விடுத்திருந்தனர்.

ஆனாலும் இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  அமைச்சரவையில் பிரஸ்தாபித்து மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரியவை அதனடிப்படையில் இந்த காணியும் அவர்களுக்கானதென சுட்டிக்காட்டியிருந்ததுடன் அக்காணிகளை அபகரிப்பதோ, சுவீகரிப்பதோ நீதிக்கு புறம்பான விடயம்.

அத்துடன் அவ்விடயம் தொடர்பாக அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் என்னிடம் ஏற்கனவே, அதனை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதனையடுத்தே காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.