கோவில்களிலும் அரச கட்டிடங்களிலும் அகதிகளாக தங்கும் அவல நிலை

-மன்னார் நிருபர்-

சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும்இ அரச கட்டிடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள் வருவதும் தொடர்கதையாக உள்ளது என இடம் பெயர்ந்துள்ள பலாலி கிராம மக்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து உறவினர்கள் வீடுகளிலும் அரச கட்டிடங்களிலும் தங்கியுள்ள பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொலிகண்டி அகதி முகாம் மக்களை வலி வடக்கு வள நிலையத்தினர் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினரும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள்

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 1990ம் ஆண்டு யாழ் பலாலி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து இப்பகுதிக்கு வந்தோம்.

யுத்தம் நிறைவு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எமது நிலங்களில் நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

எமது காணிகளை இராணுவத்தினர் அபகரித்து பயன் தரும் மரங்களை உண்டாக்கி கட்டிடங்களை அமைத்து அபிவிருத்தி செய்து பலன் பெற்று வருகிறார்கள் .

ஆனால் நாங்கள் எதுவும் இல்லாத அகதிகளாக மழை வெள்ளத்திலும் ஓலை குடிசைகளிலும் வாழ்ந்து வருகிறோம் .எங்கள் தலைமுறைகள் மீள முடியாமல் உள்ளது.

தற்போது பெய்த மழையால் வீடுகள் முழுவதும் கழிவு நீர் நிறைந்துள்ளது. மலசலக் கூடங்கள் பாவிக்க முடியாமல் சிறுவர்கள் பெண் பிள்ளைகளுடன் நிம்மதியான வாழ்வுக்காக திண்டாடி வருகின்றோம். மழையில் பாடசாலை சீருடைகள் புத்தகங்களை கூட பாதுகாக்க முடியவில்லை. பிள்ளைகளின் கல்வி சீரழிந்து போகிறது.

பல வருடங்களாக ஜனாதிபதி அரச அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடுகிறோம். பலாலியில் உள்ள எமது சொந்த காணியில் எம்மை குடியேற்றம் செய்யுமாறு. அதை எவரும் கேட்கவும் இல்லை எமக்கு தீர்வு கிடைக்கவும் இல்லை.

ஏற்கனவே சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களுக்கும் அரச கட்டிடங்களுக்கு அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள் வருவதும் தொடர்கதையாக உள்ளது. என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்த மக்கள் சந்திப்பில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.