கடும் வெப்பம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’நாட்டின் பல மாகாணங்களில் ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த வெப்ப அதிகரிப்பு நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாள் முழுவதும் போதியளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்.

முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருப்பதுடன், அவ்வப்போது வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.

இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியவும்.

கடுமையான வெயில் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ளவும்.

முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும்.

தொடர்ச்சியாக நிலவும் இந்த வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.