பிரித்தானிய தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி

ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) குறிவைத்து ஈரானிய தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது.

பிரித்தானியாவின் நலன்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஈரான் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, பிரித்தானிய தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்த டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street) ஏற்கனவே அனுமதித்திருந்தது.

இருப்பினும், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானிய தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதல்களில் பிரித்தானியா நேரடியாகப் பங்கேற்காது என்றும், “மோதல் தொடர்பான பிரித்தானியாவின் அணுகுமுறையின் பின்னணியில் உள்ள கொள்கைகள் மாறவில்லை” என்றும் டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

“ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் திறன்களைக்” குறிவைத்து மேற்கொள்ளப்படும் “அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக” இனி தளங்களைப் பயன்படுத்தலாம் என அமைச்சர்கள் இன்று ஒப்புக்கொண்டதாக டவுனிங் ஸ்ட்ரீட் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், “நிலைமையை உடனடியாகத் தணிப்பதற்கும், போருக்கு விரைவான தீர்வை காண்பதற்கும் அமைச்சர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.