அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அவசர வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நிலைமை மிகவும் பாரதூரமானது என எச்சரித்ததுடன், சர்வதேச சூழல் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய சூழல் சாதாரணமான ஒன்றல்ல, இது மிகவும் இக்கட்டான ஒரு நிலை. எனவே, பயணங்களைக் குறைத்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளைக் கொள்வனவு செய்வதன் மூலம் இந்த நெருக்கடியை நிர்வகிக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

நாட்டின் அண்மைக்கால எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு, மக்கள் மத்தியில் நிலவும் தேவையற்ற அச்சமும் ஒரு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தமை விலையேற்றத்திற்கு முக்கியக் காரணியாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான பதற்றமான கொள்வனவுகள் இடம்பெறாதிருந்தால், இந்த மாத இறுதி வரையிலாவது பழைய விலையிலேயே எரிபொருளை விநியோகித்திருக்க முடியும் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.