மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

-மட்டக்களப்பு நிருபர்-க.கிருபாகரன்

மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி பரிசோதித்த விசேட பொலிஸ் பிரிவினருடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசேட அதிகாரிகளே அவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவவுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.