சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷுவில் நேற்றிரவு அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.

மோகதீஷுவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் முன் நின்று கொண்டிருந்த கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். உடனடியாக அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், நின்றுகொண்டிருந்த மற்றொரு காரில் குண்டுவெடித்தது.

இந்த கோர நிகழ்வில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிபர் ஹஸ்சன் ஷேக் முகமது தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த அவர், ’இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பலியாகினர். இது வேதனை அளிக்கிறது’ என்றார். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் என்ற அமைப்புதான் தாக்குதலை நிகழ்தியிருக்கக் கூடும் என அதிபர் ஹஸ்சன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதே இடத்தில் தான் 2017ஆம் ஆண்டு மிகச் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு சோமாலியாவில் தீவிரமாக இயங்கி வருகிறது. சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலியா அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையிரை குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் உலகிலேயே செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தலான நாடாக சோமாலியா பார்க்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கி அல் ஷபாப் அமைப்பு நடத்திய தாக்குதல்களில் சிக்கி 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக Reporters Without Borders அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.