யுத்தத்தின் போது பிரிந்த கணவன்-மனைவி : 33 வருடங்களின் பின் சேர்ந்தனர்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- இலுப்பைகுளம் பகுதியில் இருந்து யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற கணவனும் மனைவியும் 33 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
1990 ஆம் ஆண்டு திருகோணமலை ஏழாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது திசை மாறிச் சென்ற செல்வரட்டினம் யோகேஸ்வரி (70வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.
இந்நிவையில் இந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.
1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பிறந்த செல்வரத்தினம் யோகேஸ்வரி (70 வயது) என்பவர் 1990 ஆம் ஆண்டு 06 மாதம் ஏழாம் கட்டை பகுதியில் காணாமல் போனதாக கோபால் செல்வரத்தினம் (74வயது) தெரிவித்தார்.
அன்று தொடக்கம் தனது மனைவியை தேடி வந்ததாகவும் மனைவி உயிரிழந்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 26 ஆம் தேதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாரின் உதவியுடன் அவருடைய மனைவி உயிரோடு இருப்பதாக தெரியவந்தது.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்
இதனை அடுத்து அங்கு சென்றபோது எனது மனைவியின் தோற்றம் மாறி இருந்தது. எனினும் நாடியில் மச்சம் இருந்ததும் தலையில் காயம் இருப்பதையும் கண்டேன்.
அப்போது இவர் தான் என்னுடைய மனைவி எனவும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த நேரம் என்னுடைய மனதில் ஆழ்ந்த சந்தோசம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு இவர்தானா தமது தாய் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த பெண் தன்னுஐடய உறவினர்கள் நான்கு பேரின் பெயர்களை தனது பிள்ளைகள் மத்தியில் கூறியதை அடுத்து அவர்கள் அவரை தமது தாய் தான் என உறுதிப்படுத்திக் கொண்டனர்.
அத்துடன் தனது ஏழு வயதில் காணாமல் போன தனது தாய் தம்மிடம் வந்து சேர்ந்தது தமக்கு கடவுள் கொடுத்த வரம் எனவும் அவரது மகன் தெரிவித்தார்.
அதே நேரம் தனது தாயின் முகத்தை காணாத நிலையில் தாயின் உறவினர்களின் உதவியுடன் தன்னை பெற்றெடுத்த தாய் இவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மற்றுமொரு மகள் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் இலுப்பை குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு தனியாக சீவிப்பதற்கு வீடுமற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
மிகவும் வறுமையில் இருக்கும் இந்த குடும்பத்திற்கு யாரும் உதவ முன்வந்தால் அது மிகச்சிறப்பான விடயம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.