கல்முனையில் அரச வேலை பெற்று தருவதாக கூறி 07 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண்

-திருகோணமலை நிருபர்-

கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 07 இலட்சம் ரூபாயினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என  கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒன்பதாம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக  கூறி இரண்டு வங்கி கணக்குகளுக்கு 07 இலட்சம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இது போலியாக இருவர் சேர்ந்து மேற்கொண்ட மோசடி எனவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கல்முனை பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.