பிரபல தொழிலதிபர் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்
பெலவத்தையில் வீட்டின் நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் கார் நீர்கொழும்பு பகுதியிலுள்ள வாகனதிருத்துமிடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் நீச்சல் குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அது நிர்வாணமாக அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த தொழிலதிபர் திருமணமாகாத 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சடலம் கண்டெடுக்கப்பட்ட நீச்சல் குளத்தின் அருகிலும் சில இரத்தக் கறைகள் காணப்பட்டது எனவும் அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் படி, சந்தேக நபர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் நிர்வாண உடலை இழுத்து குளியல் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பல ஆணுறைகளும் காணப்பட்டதுடன் அவற்றில் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும், கடந்த ஜனவரி 30ஆம் திகதி முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் வெல்லம்பிட்டியில் உள்ள தனது இல்லத்திலிருந்து தனக்குச் சொந்தமான காரில் புறப்பட்டுள்ளார்.
அன்றிரவு 7 மணியளவில் உயிரிழந்த தொழிலதிபரின் சகோதரி பல தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என குறித்த நபரின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வர்த்தகர் தனது சகோதரிக்கு 7.29 அளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த அழைப்பின் பின்னர் தனது சகோதரனின் தொலைப்பேசி செயலிழந்துள்ளதாக குறித்த பெண் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்து அவரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் பெலவத்தை பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற சகோதரி உட்பட குடும்பத்தின் உறவினர்கள் அங்கு அவரின் சடலம் குளியல் தொட்டியில் மிதப்பதைக் கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளதோடு, அந்த கடனட்டைகளை பயன்படுத்தி 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி இந்தோனேஷியா செல்ல விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி குறித்த வர்த்தகரின் கொலையில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படாததால் அருகில் உள்ள ஏனைய கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.