மாணவர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் மாணவரொருவரின் மண்வெட்டி தாக்குதலினால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.

மாணவனின் தாக்குதலினால் மஹதிவுல்வெவ -விகாரகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.பீ.கே.ஜானக குமார பெரேரா (26வயது) என்பவர், பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருவகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

பாடசாலை மாணவன் விடுமுறை தினத்தில் மஹதிவுல்வெவ குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற போது, குறித்த சிறுவனை மீன் பிடிக்க விடாமல் தடுத்து வீட்டுக்கு அனுப்பியதாகவும், இதனை அடுத்து இன்று காலை வீதியோரத்தில் நின்ற போது குறித்து சிறுவனை தாக்க முற்பட்டதாகவும், இதனையடுத்து கோபம் கொண்ட சிறுவன் மண்வெட்டியால் குறித்த நபரை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

 

குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.