யாழில் பாணின் விலை குறைப்பு

யாழ். மாவட்டத்தில் பாணின் விலை குறைக்கப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலத்தில் மேலும் பாணின் விலை யாழ்ப்பாண மாவட்டத்தில் குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

சடுதியாக இலங்கையில் ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகின்றது, இது ஒரு சந்தோசமான விடயம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம், நாங்கள் எதிர்பார்த்தது நடந்து கொண்டிருக்கின்றது.

200 ரூபா பாண் விற்கும் போது விலையை தொடர்ச்சியாக பேணுவதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு, அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியுடன் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு 200 ரூபாய் கட்டுப்பாட்டு விலையினை செயற்படுத்தி பாணின் விலையை உயர்த்தாது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஒரு கட்டுப்பாட்டு விலையினை பேணியிருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பாண் ஏனைய மாவட்டங்களில் உற்பத்தி செய்யும் பாணை விட மிகவும் தரமானதும் சிறந்த பாணாகும். பாணின் விலையினை தற்போது பத்து ரூபாய் குறைப்பதாக கொழும்பில் அறிவித்துள்ளார்கள் அதேபோல நாங்களும் அதனை குறைப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

தற்பொழுது கொழும்பில் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைக்கவுள்ளார்கள் அதற்கு நிகராக நாங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைப்பதற்கு இணங்கியுள்ளோம்.
பாண் உற்பத்தியில் கொழும்பு மாவட்டத்துடன் எமது யாழ்ப்பாண மாவட்டத்தினை ஒப்பிட முடியாது.

தற்பொழுது 170 ரூபாவிற்கு தான் பாண் விற்க உள்ளோம். ஆனாலும் எதிர்வரும் காலங்களில் இதனை விட மிகக் குறைவான விலைக்கு பாணை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் விலையினை குறைக்கும் போது அந்த விலைக்குறைப்பு ஏழை மக்களுக்கு பிரயோசனமானதாக அமைய வேண்டும், என்றார்.