பாடசாலை திறன் வகுப்பறை கணினியில் இருந்த ஆசிரியர்களின் குடும்பப் படங்களால் சர்ச்சை
-யாழ் நிருபர்-
வட மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் திறன் வகுப்பறை கணினியில் ஆசிரியர்களின் திருமணப் படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் சேமித்து வைக்கப்பட்டமை தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மாணவர்களின் தகவல் தொழில்நுட்பக் கல்வியை விருத்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் திறன் வகுப்பறைக் கணினி பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான கணினியில் குறித்த பாடசாலை ஒன்றில் உள்ள ஆசிரியர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடக்கிய புகைப் படங்கள் சேமித்து வைக்கப்பட்டமை சக ஆசிரியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு கண்டுபிடித்த ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் சில ஆசிரியர்கள் செயற்பட்டமையைக் கண்டித்து கல்வி உயர் அதிகாரிகளுக்கும் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் ஆசிரியர் ஒருவரால் முறைப்பாடு அனுப்பப்பட்டது.
இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வட மாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் எதிர்காலத்தில் குறித்த பாடசாலையில் இது போன்ற விடயங்கள் இடம் பெறாமல் இருக்க பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலையக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.