அண்டார்டிகாவில் சாகசப் பயணம் செய்த பெண்மணி
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள டெர்பியைச் சேர்ந்த ப்ரீத், தனது 19வது வயதில் பிரிட்டிஷ் ராணுவப் படையில் சேர்ந்தார். பின்னர் பிசியோதெரபியில் பட்டம் பெற்றார். அவரது குடும்பத்திலிருந்து பட்டம் பெற்ற முதல் பெண் ப்ரீத் தான். தற்போது பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஒரு பிராந்திய ராணுவ மறுவாழ்வு பிரிவில் பணிபுரிகிறார். பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு பகுதியாக நேபாளம், கென்யா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
சாகச விரும்பியான ப்ரீத் கென்யா, மொராக்கோ, மெக்சிகோ, பொலிவியா, பெரு, ஐஸ்லாந்து, நேபாளம் மற்றும் பல நாடுகளில் மலையேற்ற சாகசங்களை செய்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அண்டார்டிகாவைப் பற்றி அறிந்துகொண்டு தனியாக எந்த உதவிகளும் இன்றி அண்டார்டிகா துருவ பகுதிக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அண்டார்டிகா செல்ல அனுமதி அளிக்கும் அண்டார்டிக் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் எக்ஸ்பெடிஷன்ஸ் (ஏ.எல்.ஈ) – இடம் அவர் விண்ணப்பிக்கவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொள்ள விரும்பிய அவர், 2021 ஆம் ஆண்டில் துருவ பயணத்திற்கான பயிற்சியை மேற்கொண்டார். இதனிடையே அவரது துருவ பயணத்திற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 2022 நவம்பரில் உறைபனிக்கு நடுவே தனது புதிய சாகசப் பயணத்தை தொடங்கினார். அவரது பயணத்தில் தன்னை தானே ஊக்குவித்து கொள்ள சில குரல் குறிப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ரீத் தனது 67 நாட்கள் துருவ பயணத்தை நேற்று முன் தினம் நிறைவு செய்தார்.
33 வயதான சண்டி அண்டார்டிகாவில் 868 மைல்கள் (1,397 கிமீ) – (50 பாகை c ) என்ற குறைந்த வெப்பநிலையில் பனிச்சறுக்கு மற்றும் ஸ்லெட்ஜ் மூலம் பயணித்துள்ளார். இதற்கு முன்னதாக 2022 இல் ஜெர்மன் மலையேறும் வீரரான அஞ்சா பிளாச்சா என்பவர் 858 மைல்கள் ( 1,381 கி .மீ) செய்த சாதனையை ப்ரீத் தற்போது முறியடித்தார்.
இந்த நிலையில் டெர்பிஷயர் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவப் பட்டம் வழங்கியது. அதே போல் தனி பெண்மணியாக எந்த ஆதரவும், உதவியும் இல்லாமல் துருவ பகுதியில் பயணம் செய்து சாதனை படைத்ததற்கு பாராட்டை தெரிவித்துள்ளது.
தனது அண்டார்டிக் பயணத்தின் மூலம், இளைய தலைமுறையினரை எல்லைகளைத் தாண்டி அவர்கள் விரும்பியதைச் சாதிக்கத் தூண்ட விரும்பியதாக ப்ரீத் தெரிவித்துள்ளார்.