16 வயது சிறுமியை தாக்கிய சுறா

ஆஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவரின் சாகச விளையாட்டு விபரீதமாக மாறி உயிரையே பறித்த சோக நிகழ்வாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள பெர்த் நகரில் ஸ்வான் என்ற மிகப்பெரிய நதி ஓடுகிறது. இந்த நதியில் ஜெட் ஸ்கை எனப்படும் நீரில் செல்லும் மோட்டார் சைக்கிள் சவாரி சாகசம் பிரபலமாகும்.

மேலும்,  இந்த நதி பகுதியில் டொல்பின்கள் அதிகம் காணப்படுவதால் சுற்றுலாவாசிகள் ஆர்வத்துடன் இங்கு வருகை தந்து விளையாடி மகிழ்வார்கள். இந்நிலையில்,  கடந்த சனிக்கிழமை மாலை வேலையில் பெர்த்தில் வசிக்கும் ஸ்டெல்லா பெரி என்ற 16 வயது மாணவி தனது நண்பர்களுடன் இந்த நதிப் பகுதிக்கு விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க வந்துள்ளார்.

முதலில் இவர் தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த நதியில் கூட்டம் கூட்டமாக டொல்பின்கள் நீந்திக்கொண்டிருந்தன. அவற்றை பார்த்து உற்சாகமடைந்த ஸ்டெல்லாவுக்கு  டொல்பின்களுடன் தானும் நீந்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

எனவே  நீருக்குள் குதித்து, நீந்தும் டொல்பின்களுக்கு அருகே செல்லத் தொடங்கினார். அப்போது  நதிக்கு அடியில் இருந்த சுறா எதிர்பாராத விதமாக வெளியே வந்து ஸ்டெல்லாவை தாக்கத் தொடங்கியுள்ளது.

ஸ்டெல்லாவை கடித்த அந்த சுறா, அவரை நீருக்கு அடியில் இழுத்துச் சென்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லாவின் நண்பர்கள் சுறாவிடம் இருந்து ஸ்டெல்லாவை மீட்க போராடினர்.

ஆனால், சுறாவோ மாணவி ஸ்டெல்லாவை கொடூரமாக கடித்து குதறியது. இறுதியாக, சுறாவே சிறுமியை தண்ணீருக்குள் விடுவித்து சென்றது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்தியர்கள் ஸ்டெல்லா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 16 வயது மாணவி ஸ்டெல்லாவின் இந்த எதிர்பாராத மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து அதிக அளவிலான சுறா தாக்குதல்கள் ஆஸ்திரேலியாவில் தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.