13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்திய பிக்குமார்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.

பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட பிக்குமாரை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது இவ்வாறு முறுகல் ஏற்பட்டது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குமார் இன்று கோட்டே  பரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.

பேரணியை பொலிஸார் தடுத்த போதும்  பிக்குமார் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தியத்த பூங்காவை கடந்து பொல்துவ சந்தியை அடைந்தனர்.

இதேவேளை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார்  13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.