பெண்களுக்கு நிகராக அழகிகளாக மாறிய ஆண்கள்

ஒவ்வொரு வருடமும் மலையாள மாதமான மீனம் ( மார்ச் இரண்டாம் பகுதியில் வரும்) 10 மற்றும் 11 திகதிகளில் சூரியன் மறைந்த பின்னர் கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டன்குளங்கரை பகுதியில் விளக்குகள் மிளிரும், இசையால் வெடிக்கும் திருவிழா கோலத்தில் ஒரு கனவு உலகமே பூமியில் உதிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த இரண்டு திகதிகளிலும் மற்ற ஊர் திருவிழாக்களைப் போலவே, கொல்லத்தில் உள்ள ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலின் சமயவிளக்கிலும் அழகான பெண்கள் தங்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலம் நடத்துகிறார்கள். ஆனால் இங்கே நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்களுக்கான ஆச்சர்யம் அடங்கி இருக்கும். விளக்குகளை ஏற்றுவது பெண்கள் இல்லை, பெண்களை போல அலங்காரம் செய்து கொண்ட ஆண்கள் என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

சாதி, மதம், வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கேரள மாநிலம் முழுவதிலுமிருந்து ஆண்கள், புடவை அணிந்து, மல்லிகை பூ சூடி, அழகான அலங்காரங்கள் செய்துகொண்டு இந்த தனித்துவமான சடங்கில் பங்கேற்கிறார்கள். பெண் வேடமிட்ட ஆண்கள் ஐந்து முகம் கொண்ட கேரளத்தின் தெய்வீக சமய விளக்குகளை ஏற்றி கோவிலை சுற்றி வருகிறார்கள்.

இந்த செய்கை மூல தெய்வத்தின் மீதான அவர்களின் பக்தியின் அடையாளமாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் கோவில் சிறப்பு வேண்டுதலாகவும் கருதப்படுகிறது. இப்படி செய்வதால் தங்களது வேலை, பணம், சொத்து, போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்புகின்றனர். அதேநேரம் ஆண்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களே அலங்காரம் செய்து அனுப்புகின்றனர்.

19 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவின் இறுதி இரண்டு நாட்களில் மாலையில் தொடங்கி விடியும் வரை இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறும். புகழ்பெற்ற சமய விளக்கு சடங்கின் போது ராட்சத யானை திடம்பு எனும் தெய்வ சிலையை சுமந்து ஊர்வலம் செல்லும் காட்சியை இரவு முழுவதும் காணலாம்.

கோவில் கட்டப்பட்ட நாட்களில் இளம் பெண்கள் மட்டுமே வழிபாட்டுத் தலங்களில் மலர் மாலைகளைத் தயாரிக்கவும்இ விளக்குகளை ஏற்றவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாடு மேய்ப்பவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் போல உடை அணிந்து கோயிலில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அப்போது இருந்துதான் இந்த ஆண்கள் பெண்களாக மாறும் பழக்கம் தொடங்கியது.

அதேபோல, தமிழகத்தில் குலசேகரபட்டின திருவிழா எப்படி திருநங்கைகளின் சிறந்த திருவிழாவை கொண்டு இருக்கிறதோ அதே போல இந்த சமயவிளக்கு திருவிழா கேரளாவில் உள்ள திருநங்கைகளின் மிகப்பெரிய திருவிழாவாக மாறியுள்ளது. ஏனெனில் இது அவர்களின் அடையாளத்தை கொண்டாட ஒரு இடத்தை வழங்குகிறது.
kerala festival
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்