இந்தியாவிற்கான IMF நிறைவேற்று பணிப்பாளர் அரச தரப்பினருடன் கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவிற்கான (IMF) நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இலங்கைக்கு வருகை தந்து அரச தரப்பினருடனான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்த போதே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முகங்கொடுத்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரால் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நிதி சீர்திருத்தங்கள் மற்றும் IMF திட்டத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான முன்னேற்றம் குறித்தும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி கலந்துரையாடியுள்ளார்.