ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத் பானு, கல்முனை அமைந்துள்ள அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், ஒரே தடவையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்த அரிய மற்றும் சிறப்பான பிரசவம், மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளதுடன், தாயாரும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் சுகநலத்தை வேண்டி வைத்தியசாலையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் , திட்டமிடல் வைத்திய அதிகாரி எம். எம். தாஸிம், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி கே. எல். எம். றைஸ், வைத்தியர்கள்,தாதிய மேற்பார்வையாளர் , தாதியர்கள், மருத்துவ தாது மற்றும் சுகாதார சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் தலைமையிலான குழுவினர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்