
இந்த வருடம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது!
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் என்ற எல்லையைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 22ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 505,751 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
2026 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 228,424 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் கழிந்த மூன்று வாரங்களிலும் ஒவ்வொரு வாரமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 70,000ஐத் தாண்டியுள்ளமை விசேட அம்சமாகும். இதன்படி முதல் வாரத்தில் 70,355 பேரும், இரண்டாவது வாரத்தில் 77,870 பேரும், மூன்றாவது வாரத்தில் 71,101 பேரும் வருகை தந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 89,277 ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 55,407 பேரும், ரஷ்யாவிலிருந்து 45,351 பேரும், ஜேர்மனியிலிருந்து 35,413 பேரும், சீனாவிலிருந்து 31,621 பேரும் என கணிசமான அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
