மட்டக்களப்பை உலுக்கிய கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சந்தேகநபர் கொழும்பில் கைது!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த, கும்பலின் பிரதான சந்தேகநபரை, கொழும்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக, கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

கடந்த 20ம் திகதி, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து, வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ன ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.

இதன்போது, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த, 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், அவரது 22 வயதுடைய தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி மற்றும் திருகோணமலை வீதியை சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் ஆகிய 5 பேரை, 24 மணித்தியாலயத்தில் பொலிஸார் கைது செய்துடன், இரு முச்சக்கரவண்டிகள், கார் ஒன்று, கோடரி மற்றும் கூரிய ஆயுதங்கள் என்பவற்றை மீட்டனர்.

அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்கமருந்துகளை மீட்டதுடன், முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்த விசாரணையில், மயக்கமருந்து வழங்கிய மற்றும் கொள்ளையர்களை இயக்கி வந்த பிரதான சூத்திரதாரியான வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து விநியோகஸ்தரான சிவா என்றழைக்கப்படும் திவாகரன் என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, கொழும்பு வத்தளை பகுதியில் வைத்து கைது செய்து, மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.