மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர்

-பதுளை நிருபர்-

14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்

குறித்த ஆசிரியர் தன்னிடம் கற்கும் ஹாலிஎல உடுவர 7 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு மேலதிக வகுப்பிற்காக வருமாறு அழைத்துள்ளார்.

இந்நிலையில் மாலை நேர வகுப்பின் போது இடைவேளை வழங்கி அனைத்து மாணவர்களையும் வெளியே செல்லுமாறு கூறிவிட்டு குறித்த மாணவியை மட்டும் பேச வேண்டும் என நிற்குமாறு தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது கைபேசியில் ஆபாச காணொளிகளை எடுத்து அம்மாணவியை அதை பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி அதை பார்க்க மறுத்த போது மாணவியை பின்னால் இருந்து அணைத்தபடி தன்னுடைய கைபேசியில் செல்பி எடுத்துள்ளார்.

அதன் பின் வேறு பலவாறும் மாணவியோடு குறித்த ஆசிரியர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இவ்விடயம் பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை விசாரணை செய்த போது அவரது கைபேசியில் ஆபாச காணொளிகளும் புகைப்படங்களும் இருந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை இன்று வெள்ளிகிழமை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்