கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்று சொன்ன கட்சி நாங்கள் தான்

-வாழைச்சேனை நிருபர்-

இந்த நாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்று முதலாவது சொன்ன கட்சி நாங்கள் தான். இந்த மாவட்டத்தில் அவருக்கு வாக்களிக்க நாங்கள் சொல்லவில்லை, எத்தனையோ தமிழ் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றிய கோட்டாபய ராஜபக்ஷவினை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளோம், ஆனால் அவர்களுடைய பிரதிநிதிகளாக மாவட்டத்தில் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கும்புறுமூலை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு தொகுதி தளபாட உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

இந்த பிரதேசத்தில் கூட பல்வேற அபிவிருத்தி வேலைகளை செய்து தருவதாக கூறி மக்களின் வாக்குகளை பிரித்து பாராளுமன்றம் சென்றுள்ளனர் என்பது நன்கு உங்களுக்கு தெரியும்.

தேர்தல் முடிந்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் எமது இளைஞர்களது எதிர்பார்ப்புக்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.இந்த பிரதேசத்திற்கு நாங்கள் ஒரு வேலைத்திட்டங்களை கொண்டு வரும்போது அதற்கு தடையாக இருப்பவர்களும் அவர்கள்தான்.

மாவட்டத்தில் 2 தமிழ் பாராளுமன்ற இருந்தும் கூட எங்களுடன் எந்த வேலைத்திட்டங்களை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.அவர்களுக்குரியவர்களுக்கு காணி பகிர்ந்தளிப்பு, மண் அகழ்வு அனுமதி பத்திரம் வழங்கல், வேண்டப்பட்டவர்களுக்கு இறால் பண்ணை என்பன வழங்கப்படுகிறது.

இவ்வாறான விடயங்கள் தான் தற்போது மாவட்டத்தில் இடம்பெற்று வருகிறது. இதேவேளை கும்புறுமூலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மென்டிஸ் எதனோல் தொழிற்சாலையின் கழிவுகள் அருகிலுள்ள தனியார் காணியொன்றின் வளவினுள் கொட்டப்படுவதனால் அதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக பிரதேச மக்களது நாளாந்த செயற்படுகளில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த செயற்பாட்டினை நிறுத்தி தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபையின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் க.சேயோன்  அதிதியாக கலந்து கொண்டார்.