அதிசயம் நிறைந்த நடவாவி கிணறு

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் என்ற ஊரில்.48 படிகளையும், கிணற்றுக்குள் 12 தூண்களை கொண்ட நடவாவி கிணறு அமைந்துள்ளது.

இது ‘கல்லிலே கலைவண்ணம் கண்ட’ பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இங்கே,  பெரிய கல்லால் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கபட்ட ஒரு தோரண வாயில் தென்படும், அந்த வாயிலின் உச்சியில் கஜலட்சுமியின் உருவமும்,  தூணிகளின் இரு புறங்களிலும் யாளியின் உருவங்களும்,  அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து படிகளைக் கொண்ட அழகிய கிணற்றை பார்க்கலாம்.

இந்த கிணற்றுக்கு செல்வதற்கு தரையில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை இருக்கிறது. அந்தப் பாதையின் வழியே இறங்கிச் சென்றால் ஒரு மண்டம் இருப்பதைப் பார்க்கமுடியும். அந்த மண்டபத்துக்குள் ஒரு கிணறு உள்ளது. இதுதான் சிறப்புமிக்க நடவாவிக் கிணறு.

இங்கே தரைத்தளத்தில் இருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதன் வழியாக கீழிறங்கி 27ஆவது படி வரை செல்ல முடியும். இந்த படி எண்ணிக்கை 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றனர்.

அதற்குள் 12 தூண்களைக் கொண்ட அழகிய மண்டபத்தைப் பார்க்கலாம், அந்த மண்டபத்திற்குள் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் மொத்தமாக 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு மண்டலத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நடவாவிக் கிணறானது,  ஆண்டு முழுவதும் மண்டபத்தைத் தாண்டி படிக்கட்டுகள் வரை நீர் நிரம்பி இருப்பதைப் பார்க்க முடியும். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றில் இறங்கி அருள்புரிவார். இதற்காக நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிடுவார்கள்.

அப்போது,  சிறப்பு அலங்காரத்துடன் இந்த நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர் பெருமாள், கிணற்றை மூன்றுமுறை சுற்றிவருவார். அவ்வாறு சுற்றும் ஒவ்வொரு முறையும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறும். அதன்படி,  மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். அதன்படி,  சித்திரை மாத பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடி மகிழலாம். இந்த கிணற்றை வரதர் இறங்கும் சித்ரா பவுர்ணமி திருவிழாவின்போது முழுமையாக பார்க்கமுடியும்.