மலேசியாவிற்கு கடத்த முயன்ற 206 உயிருள்ள நட்சத்திர ஆமைகள் மீட்பு

மலேசியாவிற்கு கடத்த முயன்ற 206 உயிருள்ள நட்சத்திர ஆமைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலையத்தின் விமான சரக்கு ஏற்றுமதி முனையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஆமைகள் துணிகளில் சுற்றப்பட்டு, ஆறு பெட்டிகளில் அடைக்கப்பட்டு, “உலர்ந்த கடல் உணவுகள்” என்று குறியிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நட்சத்திர ஆமைகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படும் அதே இனம் (ஜியோசெலோன் எலிகன்ஸ்), ஆனால் இவை ஒரு குறிப்பிட்ட புவியியல் அடையாளத்தைக் கொண்டுள்ளது.

இது உலகில் காணப்படும் மிக அழகான ஆமை இனங்களில் ஒன்றாகும், மேலும் அதே காரணத்தால் அவை சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்தில், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் விரும்பப்படுகின்றன.