கச்சத்தீவு திருவிழா தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தின் விசேட வழிகாட்டல்கள்

-யாழ் நிருபர்-

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்தியத் தூதரகம், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்விழா குறித்து, யாழ். மாவட்ட செயலகம் முக்கிய அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

27.02.2026 அன்று காலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து கச்சத்தீவுக்கான படகுச் சேவைகள் 27.02.2026 அன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெறும்.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபா 1200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழுவாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ படகுகளில் பயணிக்கும் பக்தர்கள், தமது முழுப்பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் படகு விபரங்களை (படகு இலக்கம், வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொடர்பு இலக்கம்) இரு பிரதிகளில் கொண்டு வருவது கட்டாயமாகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப் படகுகளில் வருவோர், தத்தமது பிரதேச கடற்படை முகாம்களில் பயணப் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் 27.02.2026 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னதாக கச்சத்தீவை வந்தடைய வேண்டும்.

விழாவில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026 அன்று காலை உணவு மட்டும் வழங்கப்படும். ஏனைய நேரங்களுக்கான உணவை யாத்திரிகர்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

கச்சத்தீவுப் பகுதியில் உணவுகளைச் சமைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித பூமியாகக் கருதப்படுவதால், அங்கு மதுபானம் கொண்டு செல்வது, அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.