எந்த நாட்டிலும் இல்லாத அளவு வரி இலங்கையில் புத்தகங்களுக்கு!

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஒரு புத்தகத்தின் விலை 20% அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் குழம்பியுள்ளனர். முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் VAT வரி விகிதம் 15% ஆக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT வரி இல்லை. அதற்குதான் நேரடியாக 0 – 18%ஆக அறவிடப்பட்டது. எழுதுபொருட்களுக்கு 3%ஆக மட்டுமே இருந்தது. அவர்கள் இந்த இரண்டு விடயங்களால் குழம்பிப் போயுள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவர்கள் VAT வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர், என அவர் தெரிவித்தார்.

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொடவும் இது குறித்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார்.

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது. இது தொடருமாக இருந்தால் ஒரு பிள்ளைக்கு புத்தகம் கூட வாங்க முடியாது, என அவர் தெரிவித்தார்.