பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர். இதன்போது கலந்துகொள்பவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் காலப்பகுதியாக இது அமைவதுடன், இது பாடசாலையின் கௌரவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய, பிக் மேட்ச் நடைபெறும் காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விசேடமாகப் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்களைப் பொலிஸார் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளனர்:

மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

பாடசாலையின் கௌரவம் பாதிக்கப்படாதவாறு பொது இடங்களில் கண்ணியமாக நடந்துகொள்ளுதல்.

பொதுமக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமிடுதல் மற்றும் வீதிகளை மறிப்பதைத் தவிர்த்தல்.

ஏனைய பாடசாலை மாணவர்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாதிருத்தல்.

லொறிகள், ட்ரக் அல்லது ஏனைய வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கக் கூடாது.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வாகனப் பேரணிகளின் போது பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்குள் மதுபானம் அல்லது போதைப்பொருட்களைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும்.

எதிரணிப் பாடசாலை மாணவர்களுடன் மோதல்களில் ஈடுபடுதல், அவர்களை அவமதித்தல் அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதைத் தவிர்த்தல்.

பெற்றோர்களுக்கான விசேட வழிகாட்டுதல்கள்:

தமது பிள்ளைகள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்கள் குறித்துத் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபடுதல்.

பிள்ளைகள் உரிய நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா என அவதானித்தல்.

வாகனப் பேரணிகள் போன்ற செயற்பாடுகளுக்காகப் பிள்ளைகளிடம் வாகனங்களை வழங்கும் போது மிகவும் பொறுப்புடன் செயற்படுதல்.

இந்தக் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சட்டவிரோதமாக நடந்துகொண்டு பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால், பொலிஸார் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் என குறித்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு விளையாட்டின் உற்சாகத்தைப் புரிந்துணர்வுடன் அனுபவிக்குமாறு பொலிஸார் தமது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.