
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தூங்கியவர்கள் முகநூலில் : யஹியாகான் வெளியேற்றம்! நடந்தது என்ன ?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உயர்பீடக் கூட்ட புகைப்படங்கள் பெரும் பேசு பொருளாக காணப்பட்டன. பலரும் பல கருத்துக்களை முகநூல் வழியாக முன்வைத்த வண்ணமுள்ளனர். நக்கல் ஃ நையாண்டி எனறு அது தொடர்கின்றது.
உண்மையில் – என்ன நடந்தது என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் சர்ச்சையுடன் பேசப்பட்ட முகாவின் உயர்பீட உறுப்பினர், கட்சியின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தன்னிலை விளக்கம் ஒன்றை இன்று திங்கட்கிழமை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
யஹியாகான் – ஆகிய எனது முகநூலில் நேற்று சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை உண்மையே.
எனது வழக்கமான செயற்பாடு அல்லது எனது பொழுது போக்கு – புகைப்படங்கள் எடுப்பது. இவ்வாறு நிறைய புகைப்படங்கள் எடுப்பது எனது வழக்கம். ஆனால், அவற்றை பதிவேற்றுவது நான் அல்ல.
எனது முகநூல் கணக்கை இயக்குவது ஒருவர். அவர்தான் சகல பதிவேற்றங்களையும் செய்வார். அவ்வாறு , அவரால் பதிவேற்றம் செய்யப்பட்டதுதான் நேற்றைய உயர்பீட புகைப்படங்கள்.
உயர்பீட உறுப்பினர்கள் தூங்குவது போன்று காணப்படும் புகைப்படங்கள் உட்பட பல பத்து புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். அவரும் அவற்றை சரியாக நோக்காது பிரசுரித்து விட்டார். இதனை கல்முனையில் இருந்த ஒருவர் அவதானித்து , எனக்கு அறிவித்த பின்னர் – நான் , எனது முகநூலை இயக்குபவருக்கு அறிவித்து அழித்து விடுவதற்கு இடையில் – பலர் அதனை
பதிவிறக்கம் செய்து பல வியாக்கியானங்கள் வழங்க ஆரம்பித்து விட்டனர்.
புகைப்படங்களை அனுப்பி விட்டு – நான் உயர்பீடக் கூட்டத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை உரையாற்றியிருந்தேன். அந்த வேளையில் தான் இவ்வளவும் நடந்து முடிந்து விட்டது.
உயர்பீடத்தில் என்னை வழமையாக எதிர்க்கும் நான்கு பேர் உள்ளனர். அவர்களே இதனை பூதாகரமாக்கி – ” யஹியாகான் வேண்டுமென்று செய்துள்ளார் ” என்று தலைவரிடம் குற்றம் சுமத்தினர்.
தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து விடயங்களையும் அவதானித்து விட்டு ,யஹியாகான் – அப்படிப்பட்டவர் அல்லர். புகைப்படங்கள் எடுப்பது அவரது வழக்கம் பழக்கம். எனினும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரின் கவலையை உணர்ந்தவனாக அடுத்து வரும் – ஒரே ஒரு உயர்பீடக் கூட்டத்திற்கு வருகை தருவதற்கு தடை விதிக்கிறேன் என தெரிவித்தார்.
மட்டுமன்றி, யஹியாகானின் இன்றைய உரை – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒழுங்கு முறையான முடிவினை எடுப்பதற்கு எனக்கு உந்து சக்தியாக அமைந்திருந்தது” என்றும் தெரிவித்தார்.
மேலும் – கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி தலைவர் பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து – நான் எழுந்து , தலைவரோடு கைகுலுக்கி , புன்னகைத்தவாறு அங்கிருந்து வெளியேறினேன். மற்றும்படி – நான் வெளியேற்றப்பட்டேன் என்பது அப்பட்டமான பொய்.
முகாவின் தலைவராக வரத் துடிக்கும் சிலரின் பக்குவமின்மையையும் இங்கு நான் அவதானித்தேன்.
இங்கு – இறுதியாக ஒன்றை மட்டும் அவதானிக்க என்னால் முடிகின்றது. என்னை கட்சியில் இருந்து விலக்கிவிட்டார்கள் என்று அப்பட்டமான பொய்களை தனது எடுபுடிகளைக் கொண்டு முகநூல்களில் எழுதி வரும் ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் – என்னை நாடு பூராவும் பிரபல்யமடையச் செய்து விட்டனர் . அத்துடன் இவர்கள் என்னைப் பார்த்து அரசியல் ரீதியாக பயப்படுகின்றனர் என்பதை உணர முடிகின்றது.
என்னைப் பொறுத்தவரை – 4 வாக்குகள் கூட சொந்த ஊரிலேயே இல்லாத இவர்களை நான் கணக்கெடுப்பதே இல்லை என்றும் யஹியாகான் மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
ஆனால் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் பலரும் தூக்கத்தில் இருந்துள்ளமை வெளிப்படையாக தெரிவிக்கின்றது.
இந்தநிலையில் கல்முனை , நிந்தவூர் மற்றும் துரஇடங்களில் இருந்து வந்தவர்கள் பயணக்களைப்பில் இக் கூட்டத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

