
மட்டக்களப்பில் ஷஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலில் ஈடுபட்டனர் : சுசில்
உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு இடம்பெறுவதற்கு முன்னர் ஜஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர் இந்த ஒத்திகை குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்பாக ஏப்பிரல் 16ஆம் திகதி ஜஹ்ரான் குழுவினர் மட்டக்களப்பு தாழங்குடாவில் ஒத்திகையில் ஈடுபட்டனர் இது குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன இது குறித்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண ஆகியோருக்கும் தெரிவித்தார் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியவருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜஹ்ரான் குழுவினர் தங்கியுள்ள இடம் அவர்களது அமைப்பு குறித்து தகவல் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
