கந்தளாயில் நிலவும் கடும் பனிமூட்டமான காலநிலை!
கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கந்தளாய் – கண்டி பிரதான வீதி முற்றாகப் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வீதியினூடாகப் பயணித்த வாகனங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன.
முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் எவரும் தெரியாத அளவிற்கு பனி அடர்த்தியாகக் காணப்பட்டது.
இதன் காரணமாக, வாகன சாரதிகள் தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு மிகவும் அவதானத்துடன் மெதுவாகப் பயணிப்பதைக் காணமுடிந்தது.
அதிகாலை வேளையில் வேலைகளுக்குச் செல்பவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இந்தப் பனிமூட்டத்தினால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். குளிருடனான காலநிலை நிலவியதால் வீதிகளில் மக்களின் நடமாட்டம் வழமையை விடக் குறைவாகவே காணப்பட்டது.
