ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம். எஸ். பி. சூரியப்பெரும விடுத்துள்ள விசேட அறிவித்தலில், கணினி அமைப்பில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை, ஏனைய அனைத்துப் பொதுச் சேவைகள் இன்று முற்பகல் 11.00 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதோடு, இன்றைய தினம் முதல் தங்களது அடையாள அட்டைத் தேவைகளுக்காக திணைக்களத்தை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.