
நாட்டை சாம்பலாக்கிய கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கிறது
நாட்டை சாம்பலாக்கிய கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கிறது, மக்கள் சரியான பாடம் புகட்டுவர், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் உயிர்நாடிகளான சிறார்களை அறிவு, திறன்கள் போலவே வசதி வாய்ப்புகளைக் கொண்டும் முழுமையாக்குவது ஒரு பொறுப்பெனக் கருதி, அந்த நிலையான இலக்கை மனதில் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்படுத்தப்படும்’பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 38 ஆவது கட்டமாக கொட்டகலை ஹட்டன் கேம்பிரிஜ் கல்லூரிக்கு பாடசாலை பஸ் ஒன்றினை இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தரிசு நிலத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு திருப்புவதும், வாழ்நாள் முழுவதும் கூலித் தொழிலாளிகளாக இருந்த பெருந்தோட்டத்துறை மக்களை சிறு தேயிலை தோட்டத்தின் உரிமையாளர்களாக மாற்றுவதும் யதார்த்தமானதும் நடைமுறைமானதுமான செயற்பாடாகும்.
இவ்வாறு நான் கூறும் போது சில தரப்பினர் இதை கேலி செய்தார்கள்
அன்று எனது முன்மொழிவை கேலி செய்த தரப்பினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தோட்ட மக்களின் வாழ்க்கையை நரகத்திற்குத் தள்ளியதும், பொறாமையால் இனவாதத்தைத் தூண்டி விட்டு நாட்டை அழித்ததையுமே மேற்கொண்டனர்.
ஒவ்வொரு தேயிலை புதரின் கீழும் பெருந்தோட்ட மக்களின் தீராத துன்பங்களும் கண்ணீரும் இருக்கிறது. அந்த மக்களின் வாழ்க்கையை நரகத்திற்கு தள்ளும் பாவத்திற்கு பொறுப்பு ராஜபக்ச அரசாங்கம் தான்.
ஐக்கிய மக்கள் சக்தியால் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான புரட்சியொன்று ஆரம்பிக்கப’படும் , தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும்.
நாட்டை அழித்த கும்பல் சாம்பலைத் துடைத்துவிட்டு எழ முயற்சிக்கிறது. நாடு முழுவதும் சாம்பலாக்கப்பட்ட பின்னரே அந்தக் கும்பல் எழுந்து நிற்க தயாராகி வருகிறது.
நாட்டை வங்குரோத்தடையச் செய்து மக்களின் வாழ்வை நரகத்திற்கு தள்ளிய கும்பலுக்கு மீண்டும் ஆட்சியை வழங்குவதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டார்.



