
அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சம் வரை அதிகரிக்க தீர்மானம்
அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சம் வரை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பான யோசனையை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 14 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
முன்னதாக 20 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இக்கொடுப்பனவு தொடர்பாக அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில் 60 வீதமானவை தொடர்பில் இதுவரை ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான தீர்வு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தவருடம் ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்திற்குள் அஸ்வெசும கொடுப்பனவிற்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன், இதன்போது மேலதிகமாக 4 இலட்சம் பயனாளர்கள், நலன்புரி செயன்முறைக்குள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
