
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
-யாழ் நிருபர்-
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும், பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கவனயீர்ப்பு போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் இன்று காலை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலை சுவீகரித்து வரலாற்று தவறைச் செய்யாதே.
மேச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



