
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் வேல்நம்பி பதவியேற்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, மக்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்ட பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டுத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பதிவாளர், பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், நிதியாளர், நூலகர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்தததைத் தொடர்ந்து, இன்று முதல் அடுத்துவரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியரும், உயர்பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கபாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
