கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் குணசிங்கம் சந்துரு எனும் 42 வயதுடைய நபர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்க்கு சென்றபோது அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் குணசிங்கம் சந்துரு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவரால் அவயக் குரல் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி கணவரின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அவ்வேளை அவரையும் தாக்கி அவரிடம் இருந்த நகைகளையும் கொள்ளையிட்ட நிலையில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டில் சத்தம் கேட்பதை அவதானித்த அயலவர்கள் அங்கு சென்று, காயமடைந்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்

அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.