தேர்தலாலோ அரசியலாலோ உலகை மாற்ற முடியாது, நல்ல சிந்தனையால் மாத்திரமே முடியும்: கிழக்கு ஆளுநர்

-மூதூர் நிருபர்-

இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒன்றரை வருட காலத்துக்குள் மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவெயே சாரும் என்பதை இந்தக் கட்டட திறப்பு, சான்று பகர்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கிண்ணியா அல் ஹிறா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கணித ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் கல்வியைப் பாதுகாக்க வேண்டியது நாட்டை நேசிக்கின்றவர்களின் பாரிய பொறுப்பாகும். இந்தக் காலகட்டங்களிலும் கல்விக்கான நிதியை தாராளமாக செலவு செய்யும் ஜனாதிபதியின் சிந்தனை ஒரு தூர நோக்கான இலக்கை நோக்கியதாகும்.

மின்சார நெருக்கடி, எரிபொருளுக்கான வரிசை, போக்குவரத்து நெருக்கடி போன்ற சவால்களை எதிர் கொண்ட மக்கள், இன்று படிப்படியாக பொருளாதார இஸ்திர நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மிகவும் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை, திடீரென உயர்த்த முடியாது. அது ஒன்றும்
மெஜிக்கல்ல. அறிவாலும் கல்வியாலும் செய்யப்பட வேண்டிய ஒன்று. கல்வியால் மாத்திரமே உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தேர்தலாலும் அரசியலாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம். எஸ். நஷுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி எஸ். குலேந்திரகுமார், கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பளர் எஸ். நலீம், கிண்ணியா பிரதிக் கல்வி பணிப்பாளர் யூ. எல். சிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்