வீதியை செப்பனிடுமாறு கோரி வீதியை மறித்து போராட்டம்

-மன்னார் நிருபர்-

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் சந்தியில் இருந்து தரவன்கோட்டை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியை உரிய முறையில் செப்பனிட்டு தருமாறு கோரி குறித்த கிராம மக்கள் நேற்று புதன்கிழமை காலை 11.45 மணி அளவில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மக்கள் எழுத்தூர் சந்தியில் இருந்து தாழ்வுபாடு பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 12.30 மணி வரை குறித்த பிரதான வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் உதவி பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு தமது பிரச்சினைகளை உதவி பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

மேலும், குறித்த வீதி தொடர்பாக அங்கு வருகை தந்த மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் உதவி பிரதேச செயலாளரிடம் சில விடையங்களை முன் வைத்தார்.

குறித்த வீதி மன்னார் நகரசபைக்கு உட்பட்டதாக காணப்படுகின்றது.

எனினும் குறித்த வீதி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பல வீதிகள் அபிவிருத்தி திட்டத்திற்கு உள் வாங்கப்பட்டது.

அதன் போது அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஊடாக பல வீதி களுக்கான அபிவிருத்தி பணிகள் இடம் பெற்றது.

இதன் அடிப்படையில் குறித்த வீதி தனியார் ஒப்பந்ததாரரிடம் அபிவிருத்தி பணிக்கு கையளிக்கப்பட்டது.

குறித்த வீதி மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வீதி ஒப்பந்ததாரருக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது.மிகுதி பணம் வழங்கப்படவில்லை.

இதனால் குறித்த ஒப்பந்ததாரர் குறித்த பணி யை இடை நிறுத்தினார்.இந்த நிலையில் குறித்த வீதியின் நிலை தொடர்பாக அப்பகுதி மக்கள் மன்னார் நகர சபையிடம் முறையிட்டனர்.

மன்னார் நகர சபை பல்வேறு கூட்டங்களில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் குறித்த வீதி தொடர்பாகவும் குறித்த வீதியை முழுமையாக்கி தருமாறும் நகர சபை கோரி இருந்தது.எனினும் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

மன்னார் நகர சபை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரி இருந்தது குறித்த வீதியை செய்ய முடியாது இருந்தால் எழுத்து மூலம் சமர்ப்பிக்கும் படியும், குறித்த வீதியை நகரசபை செப்பனிடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

எனினும் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் குறித்த வீதியை செப்பனிட மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை மன்னார் நகரசபைக்கு எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பிக்கப்படவில்லை என சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினையை கேட்டறிந்த மன்னார் உதவி பிரதேச செயலாளர் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து தீர்மானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் அங்கிருந்து சென்றனர்.