கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

-திருகோணமவை நிருபர்-

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவணொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

திருகோணமலை- மட்கோ முகம்மதியா நகரில் வசித்து வந்த அமீர் முகம்மது அஸ்கான் (16வயது) என்ற மாணவனே நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

கிண்ணியா தாருல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவன் குளிப்பதற்காக அருகில் உள்ள கிணற்றிற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அரபிக் கல்லூரிக்கு குறித்த மாணவன் வருகை தராததால் சக மாணவர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த மாணவனின் செருப்பு கிணற்றுக்கு அருகில் இருந்ததாகவும், இதனையடுத்து கிணற்றிலிருந்து குறித்த மாணவன் மீட்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்த குறித்த சிறுவனின் சடலம் தற்பொழுது கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.