
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!
-யாழ் நிருபர்-
பருவகால மழை மற்றும் பராமரிப்பு மணிபளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச்சேவையானது இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமானது.
தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கி புறப்பட்டது, அது மதியம் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தினை வந்தடைந்தது.
பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.
ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது, சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும்.
இரு வழிக்கட்டணமாக 28,500 இலங்கை ரூபாய் அறவிடப்படுகின்றது.
